Publish Date: Thu, 29 Nov 2018 (14:06 IST)
Updated Date: Thu, 29 Nov 2018 (14:14 IST)
ரிலையன்ஸ் ஜியோ இந்திய தொலைத்தொடர்பு துறையில் காலடி எடுத்து வைத்து மற்ற நெட்வொர்க் நிறுவனங்களை காலி செய்தது. குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் தனது முதலிடத்தை இழந்து, வருமானத்திலும் சரிவை சந்தித்தது.
இப்போது அனைத்து ஸ்மார்ட்போன்களிகும் டூயல் சிம் ஆப்ஷன் இருப்பதால் பெரும்பாலும் ஜியோவை முதல் தேர்வாக வைத்துவிட்டு ஏர்டெல், வோடபோன் போன்றவற்றை இரண்டாம் சிம் ஆக தான் பயன்படுத்துகின்றனர். அதுவும் இன்கம்மிங் வசதிக்காக மட்டுமே.
இதனால், ரீசார்ஜ் செய்வதையும் தவிர்த்தனர். இந்நிலையில், ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனம் ரீசார்ஜ் செய்யாத நம்பர்கள் துண்டிக்கப்படும் என்று கூறியிருந்தது. அதன்படி, கணக்கெடுத்து ஏர்டெல் நிறுவனம், மாதம் குறைந்தது 35 ரூபாய் கூட ரீசார்ஜே செய்யாமல் இருக்கும் 100 மில்லியன் சந்தாதாரர்களை நீக்குவதாக இருந்தது.
அதேபோல், வோடபோன் ஐடியா நிறுவனமும் தனது பங்கிற்கு 150 மில்லியன் வாடிக்கையாலர்களை நீக்க உள்ளதாக செய்தி வெளியானது. இதனால் அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்களின் புகாரின் பெயரில் தற்போது டிராய் இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதாவது, மூன்று நாட்களுக்குள்ளாக பேலன்ஸ், காலாவதி ஆகும் தேதி, தற்போது எந்த பிளானுக்கு மாறலாம் என்பது குறித்த விபரங்களை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதனையடுத்து காலவதி தேதிக்கு முன்பே செல்போன் இணைப்பை துண்டிக்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளது.