Publish Date: Tue, 21 Nov 2017 (14:04 IST)
Updated Date: Tue, 21 Nov 2017 (20:23 IST)
அனில் அம்பானியின் ஆர்காம் தொலைத்தொடர்பு நிறுவனம் கடன் நெருக்கடியால் 2ஜி சேவையையும், வாய்ஸ் கால் சேவையையும் நிறுத்திக்கொள்வதாக அறிவித்திருந்தது.
அம்பானி குடும்பத்தை சேர்ந்த சகோதர்களில், ஒருபக்கம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இந்தியா முழுவதும் கொடிகட்டி பறந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் அனில் அம்பானியின் ஆர்காம் செயல் இழந்துள்ளது.
ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் தனது சேவைகளை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதனால், அதன் வாடிக்கையாளர்கள் வேறு நெட்வொர்க் இணைப்புகளுக்கு மாற துவங்கிவிட்டனர்.
எனவே, அக்டோபர் மாதம் வரையிலான வாடிக்கையாளர்களின் விபரங்கள், 2G GSM மற்றும் CDMA-வில் ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களை அடுத்த ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதிக்குள், வழங்க வேண்டும் என டிராய்க் காலக்கெடுவை விதித்துள்ளது.
அதேபோல், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரீசார்ஜ் கூப்பன்களும் லட்சக்கணக்கில் புழக்கத்தில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.5 கோடிக்கான ரீசார்ஜ் கூப்பன் தேங்கியிருப்பதாக தெரிகிறது.
இதே போல், இந்திய அளவில் பல கோடிகளை தொடும் அளவிற்கு ரீசார்ஜ் கூப்பன்கள் உள்ளதாக தெரிகிறது. எனவே, இதற்கும் நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கடன் நெருக்கடி ஒரு புறம், டிராய் மற்றும் இதர நெருக்கடிகள் மறுபுறம் என அனில் அம்பானியின் ஆர்காம் நிறுவனம் பெரும் சிக்கலில் தவித்து வருகிறது.