2010-2011ஆம் நிதியாண்டின் கணக்குப்படி 1.73 டிரில்லியன் டாலர்கள் மதிப்புடைய பொருளாதாரமாகத் திகழும் இந்தியா, அடுத்த பத்து ஆண்டுகளில் மூன்று மடங்கிற்கும் அதிகமாக வளர்ந்து 5.6 டிரில்லியன் டாலர்களாக பொருளாதாரமாக உயரும் என்று பொருளாதார ஆய்வு அமைப்பான டூன் அண்ட் பிராட்ஸ்ட்ரீட் கூறியுள்ளது.
டெல்லியில் இத்தகவலை வெளியிட்ட இந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவைச் சேர்ந்த பொருளாதார அலுவலர் அருண் சிங், அடுத்த பத்து ஆண்டுகளில் உள்கட்டமைப்பு உள்ளிட்டத் துறைகளில் முதலீடும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அரசு செலவிடும் தொகையும், நுகர்வோரின் வாங்கும் சக்தியும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் மட்டும் தற்போது செலவிடப்படும் நிதியின் அளவு 72 விழுக்காடு அதிகரிக்கும் என்றும், அதே நேரத்தில் சேவைகளின் மூலம் கிடைக்கும் வருவாய் - ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தற்போது 57.3% உள்ளது, 61.8% ஆக உயரும் என்றும், உள்கட்டமைப்பிற்கு தற்போது செலவிடப்படும் 7%, 12.1% ஆக உயரும் என்றும் கூறியுள்ளார்.
2020ஆம் ஆண்டில் மராட்டியம், குஜராத், ஆந்திரா, பிகார், மத்திய பிரதேசம், ஒரிசா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள், இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 66 விழுக்காடு பங்களிக்கும் என்று கூறியுள்ளார்.
ஒரி டிரில்லியன் என்பது 1,000 பில்லியன் ஆகும். ஒரு பில்லியன் என்பது 100 கோடி ஆகும். இதன்படி, இன்றைய இந்தியாவின் ஒ.உ.உற்பத்தி ரூபாயில் 77.85 இலட்சம் கோடியாகும். இது 2020இல் 252 இலட்சம் கோடியாக உயரும் என்று கூறியுள்ளது. (ஒரு டிரில்லியன் = 45 இலட்சம் கோடி)