Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லவாசா திட்டம்: கடும் நடவடிக்கைக்கு பரிசீலனை

Advertiesment
மும்பை
, செவ்வாய், 18 ஜனவரி 2011 (15:54 IST)
மும்பை, புனே ஆகிய முக்கிய நகரங்களுக்கு அருகில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் இந்தியாவின் முதல் திட்டமிடப்பட்ட அதிநவீன 'மலைநகரம்' லவாசா. இதன் கட்டுமானப்பணிகள் நன்றாக முன்னேறியுள்ள நிலையில் சுற்றுச்சூழல் மற்றும் பசுமை விதிகள் கடுமையாக மீறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
webdunia photo
FILE


இதனால் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த நகரை உருவாக்கி வரும் லவாசா கார்ப்பரேஷன் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க பரிசீலனை செய்து வருகிறது.

லவாசா கார்ப்பரேஷன் என்ற நிறுவனம், ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்சன் கார்ப்பரேஷன் (HCC) என்ற பெருநிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.

மோஸே பள்ளத்தாக்குப் பகுதியில் 7 மலைகளைக் கொண்ட அழகான இயற்கை அழகு கொஞ்சும் இடம்தான் லவாசா. மிக அழகான ஏரியும் உள்ளது. இந்த 7 மலைகள் மீதும் 100 சதுர கி.மீ. பரப்பளவுக்கு 'புதிய நகரமையம்' என்ற கருத்தாக்கத்தின் படி முதன் முதலாக மலைநகரம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த மலைநகரம் புனேயிற்கு அருகேயுள்ளது. மும்பைக்கு சற்று தொலைவில் 200 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்தத் திட்டம் 2004ஆம் ஆண்டே துவங்கப்பட்டுவிட்டது. ரூ.2000 கோடி பெறுமானமுள்ளத் திட்டமாகும் இது.

ஆனால் கடந்த 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட அறிவிக்கைகளின்படி ஏன் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதிகளைப்பெறவில்லை என்று அமைச்சகம் லவாசாவிற்கு தாக்கீது அனுப்பியது.
webdunia
FILE


ஆனால் இந்தத் தாக்கீதை எதிர்த்து லவாசா கார்ப்பரேஷன் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு செய்தது. அதில், இந்தத் திட்டம் மகாராஷ்டிர அரசின் சுற்றுலாத்துறை வளர்ச்சித் திட்டமாகும், மேலும் இது மாநில மலைச்சுற்றுலாக் கொள்கையில் அடிப்படையில் அமைந்தது என்றும் கூறியிருந்தது.

இந்த நிலையில் மோசமான முறையில் பல சுற்றுச்சூழல் விதிகள் மீறப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் கண்டுபிடித்துள்ளது. இந்தத் திட்டம் ஏறக்குறைய முடியும் தறுவாயில் இருந்தாலும் முறைகேடுகள் மிக மோசமாக இருப்பதால் அதனை விட்டுவிட முடியாது என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் கருதுகிறது.

சுற்றுச்சுழல் விதி மீறல்கள் குறித்து லவாசா கார்ப்பரேஷனுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் என்ன விதி மீறல் என்பதை இன்னமும் வெளியிடவில்லை.

மும்பை உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரி 7ஆம் தேதி சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு 17ஆம் தேதி வரை இது குறித்து பதில் அளிக்க காலக்கெடு நீட்டித்தது.

இந்த நிலையில் இன்று சுற்றுச்சூழல் அமைச்சகம் தனது பதிலை மும்பை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil