சீனாவின் தென் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் உலகின் மிகப்பெரிய அணு உலைகளைக் கொண்ட அணு சக்தி மையம் உருவாகி வருகிறது. அருகிலேயே மக்கள் தொகை நெருக்கமான ஹாங்காங்கின் பெரு நகரமும் உள்ளது.
ஜப்பான் புகுஷிமா டாய்ச்சி அணு உலை இருக்கும் இடம் போலவே, இந்த அணுசக்தி மையத்திலும் 3 அல்லது 4 அணு உலை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. இந்த அணு சக்தி மையம் இருக்கும் இடம் மிகப்பெரிய பூகம்பமும், சுனாமியும் ஏற்படும் நிலநடுக்க மையத்திலிருந்து 100 கி.மீ. தொலைவில் மட்டுமே உள்ளது.
சப்டக்சன் மண்டலம் என்று அழைக்கப்படும் ஒரு கண்டத்தட்டு மற்றொரு கண்டத் தட்டின் அடியில் ஊடுருவி விடும் பகுதியில் பெரும் பூகம்பங்கள் ஏற்படுவது வழக்கம், அது போன்ற ஒரு பகுதியில்தான் தற்போது சீனா அணு உலைகளைக் கட்டி வருகிறது.
கடந்த 440 ஆண்டுகளாக மணிலா கண்டத்தட்டில் எந்த வித விரிசலும் ஏற்படாமல் இருந்து வருகிறது. இதனால் அதில் கடுமையான சக்திகள் அடைபட்டுக் கிடப்பதால் அழுத்தம் கூடுதலாக உள்ளது. இதனால் ஒரு மிகப்பெரிய பூகம்பம் மூலமாக அழுத்தமும், சக்தியும் வெளியானால் அது அணு உலைகளில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் ஐயம் ஏற்பட்டுள்ளது.
அப்படி ஒரு பூகம்பம் நிகழ்ந்தால் தெற்கு சீனக் கடற்கரைப் பகுதியின் அருகில் உள்ள இந்த 4 அணு உலைகள் மற்றும் தய்வானின் தெற்கு முனையில் உள்ள 5-வது அணு உலை ஆகியவற்றையும் புகுஷிமா அணு உலைகளை நாசம் செய்தது போன்ற மிகப்பெரிய ராட்சத சுனாமி அலைகள் தாக்கும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.