உலகின் உணவுப்பொருட்கள் விலையேற்றத்திற்கு அமெரிக்காவின் கொள்கைகளே காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலரகளும் மனித நேய வாதிகளும் கூறியுள்ளனர்.
அதாவது உணவுப்பொருளை உற்பத்தி செய்ய வேண்டிய தானிய விதைகளை எரிபொருளான எத்தனாலை உருவாக்குவதற்கு பயன்படுத்த அமெரிக்க அரசு கடுமையான சலுகைகளை வழங்குவதால் உணவுப்பொருள் தட்டுப்பாடும் அதனால் விலையேற்றமும் ஏற்படுவதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோலியம் விலை உலகம் முழுதும் உயர்ந்து வரும் நிலையில் எத்தனால் மூலம் தயாரிக்கப் படும் இயற்கை எரிபொருளே சிறந்தது என்று எத்தனால் தயாரிப்பாளர்கள் கூற இதற்காக அமெரிக்க அரசு அளிக்கும் வரிச்சலுகைகள் உள்ளிட்ட பல சலுகைகளால் அந்தத் தானியத்தின் உணவுப்பயன்பாடு வெகுவாக குறைந்து வருவதாக விமர்சகர்கள் தெரிவித்தனர்.
கேசோலினில் எத்தனாலின் அளவைப்பொறுத்து அதற்கு ஒரு கேலனுக்கு 45 சென்ட்கள் வரிவிலக்கு அளிக்கப்பட்டது. இது மிக மோசமான பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் எரிவாயுக் கொள்கை என்று விமர்சகர்கள் காரசாரமாக பேசி வருகின்றனர்.
உலகின் உணவுப் பொருள் விலையேற்றத்தில் எத்தனாலுக்காக அமெரிக்க தானியப் பயிர்கள் மாற்றப்படுவது 30% பங்களிப்பு செய்கிறது என்று ஃபோர்ட் ரஞ்ச் மின்னசோட்டா பல்கலை பேராசிரியரும், ஆய்வாளரும் கூறியுள்ளார்.
உணவுத் தானியம் ஒன்றை 40% எத்தனால் பயன்பாட்டிற்காக பயன்படுத்துகிறார்கள் என்றால் உணவுப்பொருள் விலையேற்றத்திற்கு இதுவே காரணம் என்று கூற ஒருவர் பொருளாதார நிபுணராக இருக்கவேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார் பேராசிரியர் ரஞ்ச்.
தானியப் பயிர்களில் சோயாபீன், பருப்பு வகைத் தானிய விதைகள் ஆகியவற்றை எத்தனால் தயாரிக்க அமெரிக்கா பயன்படுத்துகிறது. இதனால் உலகின் ஏழை நாடுகள் உணவு விலை ஏற்றத்தால் அவதியுறுவதாக அவர் யேல் பல்கலைக் கழகத்தில் உரை ஒன்றில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார்.
உணவுப்பற்றாக்குறை உள்ளிட்ட விவகாரங்களால்தான் இன்று ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளில் மக்கள் தெருக்களில் வந்து ஆர்பாட்டம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒருபுறம் மத்திய கிழக்கு நாடுகளில் இதனால் பதற்றம் ஏற்பட்டு வருகையில் தங்கள் நாடு எரிசக்தி பாதுகாப்பை முழுதும் பெறும் அவசியம் தேவை என்பதற்கும் மத்திய கிழக்கு பதற்றத்தையே தங்களுக்கும் நியாயமாகப் பேசுகின்றனர் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
உலகம் அழிந்தாலும் அமெரிக்காவின் பணத்தை அழிக்க முடியாது என்ற நிலையில் உச்சத்தில் இருக்கும் ஒரு நாடு தனது எரிபொருள் பாதுகாப்பிற்காக மற்ற நாடுகளின் உணவுப்பாதுகாப்பை சீரழித்து வருகிறது!