Publish Date: Wed, 02 Apr 2014 (19:43 IST)
Updated Date: Fri, 04 Apr 2014 (18:47 IST)
கலிங்கபட்டியில் மதிமுக பொதுச்செயலர் வைகோ வீட்டிற்கு புதன்கிழமை மாலை தேமுதிக நிறுவனர், தலைவர் விஜயகாந்த் வந்தார். அங்கு வைகோவின் தாயாரை சந்தித்து சால்வை அணிவித்து விஜயகாந்த் ஆசிபெற்றார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக பொதுச்செயலர் வைகோவை ஆதரித்து தேமுதிக நிறுவனர், தலைவர் விஜயகாந்த் புதன்கிழமை பிரசாரம் செய்கிறார். திருநெல்வேலியில் தங்கியிருந்த விஜயகாந்த், புதன்கிழமை மாலை வைகோவின் சொந்த ஊரான கலிங்கபட்டிக்கு சென்றார். விஜயகாந்தை, வைகோ வாசல் வரை வந்து வரவேற்று வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு வைகோவின் தாயார் மாரியம்மாளுக்கு மாலை, சால்வை அணிவித்த விஜயகாந்த் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.
பின்னர் வைகோவின் மனைவி ரேணுகாதேவி, மகன் துரைவையாபுரி, வைகோவின் தம்பி கலிங்கபட்டி ஊராட்சித் தலைவர் வை. ரவிச்சந்திரன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை விஜயகாந்த்க்கு வைகோ அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் விஜயகாந்த் வைகோவின் குடும்ப உறுப்பினர்களுடன் அரை மணி நேரத்திற்கு மேலாக பேசிக்கொண்டிருந்தார்.