பிரிட்டிஷ் கவுன்சிலின் சிக்கன நடவடிக்கை காரணமாக நிதி மற்றும் ஐடி துறைகளில் இந்தியாவுக்கு 100க்கும் அதிகமான அவுட்சோர்சிங் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது.
பிரிட்டிஷ் கவுன்சிலில் 1,300க்கும் அதிகமான இங்கிலாந்து பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த அமைப்புக்கான செலவீனங்களுக்குரிய நிதியை, இங்கிலாந்து அயலுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம் அளித்து வருகிறது. இந்நிலையில், செலவு குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ள இந்த அலுவலகம், பிரிட்டிஷ் கவுன்சிலில் பணியாற்றி வரும் சுமார் 500க்கும் அதிகமான நபர்களை அடுத்த 18 மாதங்களில் பணியிலிருந்து விடுவிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 45 மில்லியன் பவுண்டுகளை மிச்சப்படுத்த முடியும் என்று அந்த அலுவலகம் கருதுகிறது.அதே சமயம் விடுவிக்கப்படும் பணியாளர்கள் செய்ய வேண்டிய 100க்கும் அதிமான வேலைகளை, அவுட்சோர்சிங் பணியாக இந்தியாவுக்கு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.நிதி மற்றும் தகவல் தொழில்நுட்பத் (ஐடி) துறைகளில் அளிக்கப்படும் இந்த வேலைவாய்ப்பு, பகுதி நேர வேலையாகவோ அல்லது ஒப்பந்த அடிப்படையிலான வேலையாகவோ ஏதாவது ஒரு இந்திய நிறுவனத்திற்கு அளிக்கப்படலாம் என்று லண்டனிலிருந்து வெளியாகும் ' தி டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.