கல்வித்துறையில் தனியார் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் லாபம் சம்பாதிக்க மத்திய அரசு அனுமதிக்காது என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
மகளிர் அமைப்பு சார்பில் புதுடெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய கபில் சிபல், “உலக பொருளாதார நெருக்கடி காரணமாக எந்தத் துறையிலும் லாபம் பார்க்க முடியாத காரணத்தால் கல்வித்துறையில் சம்பாதிக்க நினைக்கும் இந்திய தொழில் அதிபர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது, “மத்திய அமைச்சராகிய நான் பாறையைப் போல் நின்று அதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்வேன்”.
கல்வித்துறையில் லாபம் சம்பாதிக்க எந்த நாடு அனுமதிக்கிறது? எனக் கேள்வி எழுப்பிய கபில் சிபல், உலகளவில் சிறந்து விளங்கும் ஹார்வர்ட், யேல், ஸ்டான்ஃபோர்டு ஆகிய பல்கலைக்கழகங்கள் லாப நோக்கமற்ற கல்வி நிறுவனங்களாகவே செயல்படுகின்றன.
கல்வித்துறையில் முதலீடு செய்வது என்பது அறிவை வளர்த்து அதன் மூலம் வளத்தைப் பெருக்குவதே ஆகும். ஆனால் இன்று பள்ளிப்படிப்பில் சேரும் குழந்தைகளில் 88% பேர் பல்கலைக்கழகப் படிப்பு பெறுவதில்லை” என்றார்.
நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கல்வித்துறைக்கு எந்தளவு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற கேள்விக்கு, “கல்விக்கு மத்திய அரசு கூடுதல் முன்னுரிமை வழங்குவதால், நிதி ஒதுக்கீடு ஏமாற்றம் அளிக்காத வகையில் இருக்கும்” என்றார்.