இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து உருவாக்கிய தகவல்தொடர்பு தொழில்நுட்ப கழகம் என்ற அமைப்பின் மூலம் தொழில்நுட்பக் கல்வி ஆசிரியர்களுக்கு மதுரையில் விரைவில் சிறப்பு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தகவல்தொடர்பு தொழிநுட்பக் கழகம் மூலம் தொழிற்சாலைகளுக்குத் தேவையான திறன்மிக்க பணியாளர்களை உருவாக்கும் வகையில் சிறப்பு பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி மதுரையில் 5,000 தொழில்நுட்பக் கல்வி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி விரைவில் அளிக்கப்படும். இந்த ஆசிரியர்கள் மூலம் 2.5 லட்சம் தொழில் கல்வி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் மதுரையில் பொருளாதார மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் சிறு, குறுந்தொழில் நிறுவனத்தைச் சேர்ந்தோர் பங்கேற்க உள்ளனர்.