மாநிலக் கல்வித்திட்டத்தில் மத்திய அரசு தலையிடாது என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் டி.புரந்தேஸ்வரி கூறியுள்ளார்.
ஸ்ரீ பெரும்புதூர் ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியது:
கல்விக் கடனுக்கான வட்டி மானியம் வழங்க அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக உரிய துறைகளிடம் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் வந்த கல்வி நிறுவனங்கள் மீது சிபிஐ நடவடிக்கை எடுத்தது. இப்பிரச்னை தொடர்பாக ஆராய ஒரு கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 16 மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் 14 சிறப்பு உயர்கல்வி நிறுவனங்களை தொடங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். மத்திய பல்கலைக்கழகங்கள் இல்லாத பகுதிகளில் அவை தொடங்கப்படும். மாநில கல்வி பாடத்திட்டத்தில் மத்திய அரசு தலையிடாது.
இந்தியாவில் அயல்நாட்டு பல்கலைக்கழங்களை தொடங்க அனுமதி தருவது குறித்து அரசு ஆய்வு செய்து வருகிறது. நமது நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை புரட்சியால் ஆராய்ச்சித் துறைக்கு சிறிது பாதிப்பு ஏற்பட்டது. இளைஞர்களை ஆராய்ச்சி துறையின் பக்கம் ஈர்க்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.