துணைவேந்தர் பதவிகாலத்தை 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக மாற்ற முயற்சி எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை செயலர் கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்தியா-இத்தாலி இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த காரணமாக இருந்தாக கூறி இத்தாலி நாடு சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ராமச்சந்திரனுக்கு ஸ்டெல்லா டெல்லா சாலிடரிட்டா இத்தாலியானா என்ற செவாலியே விருதை வழங்கியது.
விருது பெற்ற துணைவேந்தர் ராமச்சந்திரனுக்கு பாராட்டுவிழா சென்னை பல்கலைக்கழகத்தின் சர்வதேச மையம் சார்பில் நடத்தப்பட்டது.
இந்த விழாவில் தமிழக அரசின் உயர் கல்வித்துறை முதன்மை செயலர் கணேசன் பேசுகையில், ''துணைவேந்தர் ராமச்சந்திரன் துணைவேந்தராக பணிபுரிந்த 3 ஆண்டு காலத்தில் வெளிப்படையாக, திறந்த மனதுடன் செயல்பட்டார்.
துணைவேந்தர் பதவி 3 ஆண்டு போதாது என்று நினைக்கிறேன். ஏனென்றால் சில திட்டங்களை நிறைவேற்ற காலதாமதம் ஆகும். எனவே துணைவேந்தரின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக நீட்டித்தால் நல்லது.
தமிழகத்தில் பல்கலைக்கழக பொது சட்டம் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு துணைவேந்தர் பதவி காலத்தை 5 ஆண்டுகளாக மாற்றுவது குறித்து ஆராய்வார்கள். துணைவேந்தர் பதவி காலத்தை 5 ஆண்டுகளாக மாற்ற முயற்சி எடுக்கப்படும் என்றார்.