சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆன்-லைன் கல்விக்கான இ-லேர்னிங் மையம் மற்றும் நெட்வொர்க் ஆபரேட்டிங் மையம் திறக்கப்பட்டுள்ளது.
இவற்றை சென்னைப் பல்கலை துணைவேந்தர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கான பிரத்யேக இணையதளத்தையும் (ide.unom.ac.in) அவர் துவக்கி வைத்தார்.
பின்னர் பேசிய துணைவேந்தர் ராமச்சந்திரன், “கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நான் துணை வேந்தராகப் பதவியேற்ற போது தொலைதூரக் கல்வி மையத்தின் மாணவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 30 ஆயிரமாக இருந்தது. தற்போது அது ஒரு லட்சத்து 70 ஆயிரமாக உயர்ந்துள்ளது” என்றார்.
இ-லேர்னிங் மையத்தின் மூலம் விர்ச்சுவல் பல்கலைக்கழகம், டெலி எஜுகேஷன், பான் ஆப்ரிக்கா நெட்வொர்க்கிங் ஆகிய பணிகள் ஒருங்கிணைக்கப்பட உள்ளதாகவும், நெட்வொர்க் ஆபரேட்டிங் மையத்தின் மூலம் தொலைதூரக் கல்வி மையத்தின் பணிகள் அனைத்தும் கணினிமயமாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.