Publish Date: Mon, 09 Oct 2017 (17:32 IST)
Updated Date: Mon, 09 Oct 2017 (17:43 IST)
விஷ்ணு புராணத்தில் தீபாவளியன்று விடியற்காலையில் நீராடி மகாலட்சுமியை பூஜை செய்து தீபங்களை வீட்டில் பல இடங்களில் வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
தீபங்களின் அணிவரிசையாம் தீபாவளி பண்டிகை, பழங்காலம் முதலே கொண்டாடப்பட்டு இருக்கலாம் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரி்வித்துள்ளனர். தீபாவளி என்றால் நம் நினைவுக்கு வருவது பட்டாசு மற்றும் இனிப்பு வகைகள்தான்.
பகவான் கிருஷ்ணர் நரகாசுரன் என்ற அசுரனை அவனது கொடுமைகள், இம்சைகள் தாங்காது கொன்று அழிக்கின்றான். அத்தருணத்தில் நரகாசுரன் ஒரு வரம் கேட்கின்றான். பல கொடுமைகள் புரிந்த தீயவன் நான் இறந்துபோகும் இந்நாளை மக்கள் என்றென்றும் மகிழ்ச்சிகரமாக கொண்டாடவேண்டும் என்பதே அவ்வரம்.
குஜராத் மக்களுக்கு தீபாவளிதான் வருடப்பிறப்பு. அங்கு இத்திருவிழா லக்ஷ்மி பூஜை, புது கணக்கு ஆரம்பித்தல் என்று வெகு சிறப்பாக அமாவாசை தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெறுகின்றது. இவர்கள் தீபாவளியன்று தங்கள் இல்லம் முழுவதும் வண்ண வண்ண தீபங்கள் ஏற்றுகின்றனர் தீபாவளி என்றால் தீப+ ஆவளி அதாவது தீப வரிசை என்று பொருள்.
நமது நாட்டின் மேற்குப் பகுதியில் இருந்து கிழக்குப் பகுதிக்கு சென்றால் அங்கே வேறு விதமான கொண்டாட்டம் இவர்கள் தீபாவளியை மஹாநிசா என்று கொண்டாடுகின்றனர். அசுர இரத்தம் குடித்ததால் காளி தேவிக்கு ஏற்பட்ட ஆங்காரத்தை சிவபெருமான் தணித்த தினம் என்பதால் அமாவாசை இரவில் காளி பூஜை பிரபலம். விடிய விடிய வெகு சிரத்தையுடன் சிவபெருமானின் மேல் முண்ட மாலையுடன் நடனமாடும் தக்ஷிண காளி ரூப சிலை பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர் சமஷ்டி பூர்வமாக. இன்று நாம் கார்த்திகை தீபத்தன்று வீடெங்கும் தீபம் ஏற்றுவது போல தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.
ஸ்கந்த புராணத்தின்படி சக்தியின் 21 நாள் கேதார கௌரி விரதம் முடிவுற்றது இந்த நாளில்தான். விரதம் முடிந்த பின்னர் சிவன் சக்தியை தன்னுள் ஒரு பாதியாக ஏற்று அர்த்தநாரீஸ்வராக உருவமெடுத்தார் என்கின்றன புராணங்கள்.
ஜைனர்கள் தீபாவளி நாளை மஹாவீரர் பரிநிர்வாணம்(வீடுபேறு) அடைந்த நாளாக கொண்டாடுகின்றார்கள்.
Webdunia
Publish Date: Mon, 09 Oct 2017 (17:32 IST)
Updated Date: Mon, 09 Oct 2017 (17:43 IST)