Publish Date: Tue, 03 Nov 2015 (21:02 IST)
Updated Date: Tue, 03 Nov 2015 (21:08 IST)
தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் ஐப்பசி அமாவாசை முன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடும் ஓர் இந்து பண்டிகையாகும். இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.
பொதுவாக, ‘தீபம்’ என்றால் ‘விளக்கு’. ‘ஆவளி’ என்றால் ‘வரிசை’. அதாவது இந்த நாளில் விளக்குகளை வீட்டில் வரிசை வரிசையாய் விளக்கினை ஏற்றி, இருண்டு இருக்கும் வீட்டை பிரகாசமாக வைப்பது. அதுபோல மனதில் உள்ள இருளையும் போக்கி, ஒளியேற்றி வைப்பதாகும்.
உலகில் உள்ள எல்லா இந்துக்களும் இத்தினத்தைக் கொண்டாடுகிறார்கள். இது மிக மிகப் பழங்காலதிருந்தே இந்துக்களின் வாழ்க்கையோடு கலந்துபோன கொண்டாட்டமாகும்.
ஸ்ரீ கிருஷ்ண பகவான் நரகன் என்ற அசுரனை வதம் செய்தபோது அவனுடைய கடைசி வேண்டுகோளிற்கேற்ப தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
வட இந்தியாவில் சில இடங்களில் தீபாவளியன்று நரகாசுரனுடைய உருவங்களைக் கொளுத்தி கிருஷ்ண பகவானுடைய வெற்றியைக் கொண்டடுவதுண்டு.
இராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால், அந்நாட்டில் உள்ள மக்கள் இராமனை வரவேற்பதற்கு, தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்பதாக இராமாயணத்தில் சொல்லப்படுகிறது.
1577-இல் இத்தினத்தில், பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர்.
சமணர்களின் தீபாவளி மகாவீரர் நிர்வானம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தை சமணர்கள் கொண்டாடுகின்றனர்.
சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகெளரி விரதம் முடிவுற்றதும், அந்த நாளன்று சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக் கொண்டு, ‘அர்த்தநாரீஸ்வரர்’ ஆக உருவெடுத்ததால், தீபாவளி கொண்டாடப்படுவதாக, ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது.