Publish Date: Sat, 07 Nov 2015 (13:13 IST)
Updated Date: Sat, 07 Nov 2015 (13:24 IST)
மௌனத்தைக் கலைத்துச் சென்று
ஆகாயத்தில் வட்டமிட்டு
அழகுறச்செய்தபடி கீழே விழும்
ஒரு மனிதன் நாள் முழுக்க
கந்தகத்தில் புரண்டு புரண்டு
செய்த பட்டாசினை
இன்னொரு மனிதன்
வாங்கி வெடிக்கும் மகிழ்வில்
ஒரு குடும்பம் பசியாறுகிறது
சிரிப்பை விட்ட முகங்களும்
அப்போது சிரிக்கும்
சாலைகளின்
நெருக்கடிகளுக்குள்
அகப்பட்டுக்கொண்டிருக்கும்
பட்டாசின் மின்னல் துளிகளானது
தீபத்தின் முகத்தை
பளிச்சென படமெடுக்கிறது
பாறை மனம் கொண்டவரும்
அசுர குணம் கொண்டவரும்
தீபத்தின் முன்னே
குழந்தை மனம் கொள்வது இயல்பு
பட்டாசு புகையின் நெடிகளிலும்
மழலைகளின் குபீர் சிரிப்புகளிலும்
வீடுகள் தெருக்கள்
மயங்கிக் கிடக்கும்
அதிகாலை
சூரியக் குளியலின் நீரினில்
கெட்டவை யாவும்
அறுந்து போகும்
தேசமெங்கும் கேட்கும்
பட்டாசுகளின் ஒட்டுமொத்த
குரலோசையும்
பிரிவினை வாதத்திற்கு
கண்டனம் தெரிவிப்பதாய்
பலமிழந்து கிடக்கும்
மனித உரிமையின் உணர்வின்
மத்தியில் தீபம்
நிமிர்ந்து நின்று
எழுச்சியூட்டும் வெற்றி
கீதத்தை இசைகிறது.
கவிஞர் கோபால்தாசன்