Publish Date: Mon, 10 Jan 2022 (17:03 IST)
Updated Date: Mon, 10 Jan 2022 (17:42 IST)
தற்போதைய சூழ்நிலையில் பல இடங்களில் முகக்கவசம் கட்டாமாக்கப்பட்டு வரும் நிலையில் சிறந்த முகக்கவசத்தை பயன்படுத்துவது சிறந்தது.
உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாகவே கொரோனா பாதிப்புகள் நீடித்து வரும் நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவத்தொடங்கியுள்ள ஒமிக்ரான் தொற்று உலக நாடுகள் பலவற்றிலும் பரவியுள்ளது. இந்தியாவில் தமிழகம் உட்பட 27 மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது ஒமிக்ரான் தொற்று மூன்று வகையாக பரவத் தொடங்கியுள்ளதாக ஒமிக்ரானை ஆய்வு செய்து வரும் இன்சாகோக் அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி ஒமிக்ரான் பிஏ1, பிஏ2 மற்றும் பிஏ3 என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் பிஏ1 வீரியமிக்கதாகவும், வேகமாக பரவுவதாகவும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது ஒமிக்ரான் பரவலால் டெல்டாவின் ஆதிக்கம் முடிவுக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் விரிவான தொகுப்பின் ஒரு பகுதியாக முகக்கவசங்களை பயன்படுத்துவது குறிப்பிடப்பட்டுள்ளது. முகக்கவசங்கள் தற்போது பல வகைகளில் விற்பனைக்கு வருகிறது.
1. பருத்தி அல்லது செயற்கை துணியால் செய்யப்பட்ட துணி முகக்கவசங்கள்
2. 3 அடுக்கு பாதுகாப்புகளை கொண்ட சர்ஜிக்கல் அல்லது டிஸ்பென்ஸபிள் மாஸ்க்குகள்
3. நான்கு அல்லது ஐந்து அடுக்குகளாலான வளைந்த வடிவமைப்பை கொண்ட ரெஸ்பிரேட்டர்ஸ்
4. கேஎன்95 போன்ற நான் மெடிக்கல் மாஸ்க்குகள்
இந்நிலையில் தற்போதைய சூழ்நிலையில் பல இடங்களில் முகக்கவசம் கட்டாமாக்கப்பட்டு வரும் நிலையில் நம்மை நோய் தொற்றில் இருந்து காப்பாற்றிக்கொள்ள விலை மலிவான அல்லது துணியால் ஆன முகக்கவசங்களை தவிர்த்துவிட்டு 3 அல்லது 5 வரையிலான அடுக்குகளை கொண்ட மாஸ்குகளை பயன்படுத்த வேண்டும்.