Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'இரத்த சரித்திரம்' - தாமிரபரணி படுகொலை வரலாறும், பின்னணியும்!

'இரத்த சரித்திரம்' - தாமிரபரணி படுகொலை வரலாறும், பின்னணியும்!

கப்பிகுளம் ஜெ.பிரபாகர்

, புதன், 23 ஜூலை 2014 (19:02 IST)
கடந்த 13 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் தவிர்க்கப்படமுடியாத தினமாக நிலைபெற்றுவிட்டது, கூலிஉயர்வு கேட்டுப் போராட்டம் நடத்திய 17 தொழிலாளர்களை காவல்துறையினர் அநியாயமாக அடித்துக்கொன்ற தாமிரபரணி நினைவு தினம் ஜூலை 23.
சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாக அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் சேரன் மார்த்தாண்டவர்மன், போரில் தனது வெற்றிக்கு உதவியதற்காக மேற்குத்தொடர்ச்சி மலையில், தன் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததில் 74,000 ஏக்கர் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார்.
 
1930-இல் சிங்கம்பட்டி ஜமீன்தார், தன்னிடமிருந்த நிலத்தில் சுமார் 8374 ஏக்கர் நிலத்தை, 99 வருட குத்தகை ஒப்பந்தம் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தின் நுஸ்லேவாடியா என்பவருக்குச் சொந்தமான பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன்(பி.பி.டி.சி) என்ற தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தார். அந்த காடுகள்தான் மாஞ்சோலை எஸ்டேட்டாக மாறியது. திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் புதர்காடுகளை மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய தேயிலை எஸ்டேட்டுகளாக உருவாக்கிய பெருமை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் பட்டியலின தேவேந்திர குல மக்களையே சாரும்.
 
1948 ஆம் ஆண்டின் இரயத்துவாரி நில ஒழிப்புச் சட்டத்தின் அடிப்படையில் சிங்கம்பட்டி ஜமீன்தாருக்குச் சொந்தமான நிலங்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன. ஆனால் பிபிடிசி நிறுவனமோ, அப்போதைய தமிழக காங்கிரஸ் அரசுடன் குத்தகை ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொண்டு தனது குத்தகை காலத்தைத் 2029 வரை தொடர்ந்தது.
 
மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் நிரந்தரம் மற்றும் தற்காலிகமாக சுமார் 5000க்கும் அதிகமான தோட்டத்தொழிலாளர்கள் வேலைபார்த்து வந்தனர். தேயிலை, காஃபி, ஏலம், மிளகு போன்ற பணப்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. 1968 ஆம் ஆண்டில் தேயிலை பறிக்க டிராலி வண்டி அறிமுகப்படுத்தப்பட்டதற்கு எதிராகவும், 1978 ஆம் ஆண்டில் தேயிலைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்கு தினமும் காலையில் கூடுதலாக இரண்டு இட்லி கொடுக்க வேண்டும் என்றும், 1988 ஆம் ஆண்டில், அன்றாடம் பணிபுரியும் இடத்திற்குச் செல்ல காலை வேளையில் கூடுதலாகப் பத்து நிமிடங்கள் தரவேண்டும் என்றும் மாஞ்சோலையில் அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்று வந்தது.
webdunia
1998 ஆம் ஆண்டில் மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் 33 ரூபாய் உட்பட தினக்கூலியாக ரூபாய் 53 மட்டுமே பெற்று வந்தனர். இந்நிலையில் தென்காசி நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க மாஞ்சோலை வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமியிடம் மாஞ்சோலைப் பகுதி மக்கள் தங்கள் பிரச்சனைகளை முன்வைத்தனர். ஆண்டாண்டு காலமாக கொத்தடிமை போல நடத்தப்படும், தொழிலாளர்களின் பரிதாப நிலையை கேட்டறிந்த டாக்டர்.கிருஷ்ணசாமி தேர்தல் முடிந்தவுடன் இதற்கொரு முடிவு கட்டுவோம் என்று உறுதியளித்தார்.
 
தேர்தல் முடிவுற்ற பின்பு மாஞ்சோலை பகுதி தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில் தினக்கூலியை 150 ரூபாயாக உயர்த்த வேண்டும், அடிப்படை வேலையான 16 கிலோ தேயிலைக்கு கூடுதலாகப் பறிக்கும் ஒவ்வொரு கிலோவுக்கும் ரூபாய் 5 தர வேண்டும், எஸ்டேட் பகுதியில் நிலவும் கொத்தடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 33 கோரிக்கைகள் புதிய தமிழகம் கட்சியினால் முன்வைக்கப்பட்டது. அதனை பிபிடிசி நிர்வாகம் 20.08.98க்கு முன்பாக நிறைவேற்றித்தர வேண்டும் என காலக்கெடுவும் விதிக்கப்பட்டது.
 
பிபிடிசி நிர்வாகம், புதிய தமிழகம் கட்சியின், உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை புறந்தள்ளியதன் விளைவாக தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் 20.08.1998 முதல் வேலைப்புறக்கணிப்பில் ஈடுபடத் துவங்கினார்கள். தங்கள் உரிமைக்கு குரல் கொடுக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தோள் கொடுக்க மாஞ்சோலை பகுதி மக்கள் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., சி.பி.அய்., சி.பி.அய்(எம்)., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்கங்கத்தையும் கலைத்து புதிய தமிழகம் தொழிற்சங்கம் என்ற ஒரே குடையின் கீழ் அணி திரண்டனர். 03.09.1998ல் எஸ்டேட் நுழைவாயிலை இழுத்து மூடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
webdunia
ஊத்து எஸ்டேட்டில் இருந்து தேயிலைத் தூள் ஏற்றிச் சென்ற தனியார் லாரி மறிக்கப்பட்டது. மறுநாள் 04.09.1998 எஸ்டேட் நிர்வாகத்தினரோடு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். ஆனால் அதன்பிறகு மாஞ்சோலை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வீடுகளில் புகுந்து தாக்கினர். கண்ணில் பட்டவர்களையெல்லாம் அடித்து இழுத்துச் சென்றனர். 127 தொழிலாளர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சுமார் 6 மாத கால போராட்டத்திற்கு பின்பு ஜனவரி 1999 முதல் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினார்கள். ஆனால், எஸ்டேட் நிர்வாகமோ தற்காலிகத் தொழிலாளர்களிடம் சட்டத்திற்கு புறம்பாக வேலைநிறுத்ததில் ஈடுபட்ட உங்களை ஏன் வேலை நீக்கம் செய்யக்கூடாது? என கேள்வியெழுப்பியது.
 
webdunia
பிபிடிசி நிர்வாகம் தொழிலாளர்களுக்கு பல்வேறு சங்கடங்களை உண்டாக்கியது. தற்காலிகத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய நிரந்தரத் தொழிலாளர்களின் ஊதியம் பாதியாகக் குறைக்கப்பட்டது. இதனால் கொதித்தெழுந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் 07.06.1999 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவரின் வீட்டை முற்றுகை இட்டனர். சுமார் 800 பேர் கைது செய்யப்பட்டனர். 451 பேர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். தளராமல் மறுநாளும் 08.06.1999 முற்றுகையிட்ட 198 பெண்களும் 4 ஆண்களும் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 198 பெண்கள் உட்பட 653 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
 
அப்போதைய ஆளும் தி.மு.க. அரசோ தொடர்ந்து எஸ்டேட் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் 47 நாட்களாக கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டுள்ள 653 தொழிலாளர்களை விடுதலை செய்யக்கோரியும், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்னிறுத்தி 23.07.1999 அன்று திருநெல்வேலி மாநகரில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. பல்வேறு பகுதி மக்களுடன், தமிழ் மாநில காங்கிரஸ், அய்க்கிய ஜமாத், சி.பி.அய்., சி.பி.அய்(எம்), உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இணைந்து தாமிரபரணி நதிக்கரையில் பேரணி சென்றார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டதை பொறுக்க முடியாத ஆளும் வர்க்கம், லட்சக்கணக்கான மக்கள் தன்னெழுச்சியாக புதிய தமிழகம் என்ற கட்சியின் பின்னால் அணி திரள்வதை சகித்துக் கொள்ள முடியாத அதிகார வர்க்கம் காவல்துறையின் மூலமாக கலவரத்தை கட்டவிழ்த்து விட திட்டமிட்டது. பேரணியை வழிநடத்திவந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். க.கிருஷ்ணசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்க்குள் சென்று மனு கொடுப்பதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டது.
webdunia
ஆளும் தி.மு.க.வால் திட்டமிட்டே குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் தடியடி, துப்பாக்கிச்சூடு என்று வன்முறையில் இறங்கினர். தலைவர்களின் உயிருக்கும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைந்த மக்கள் சிதறி ஓடினார்கள். உயிர் தப்பிக்க ஓடிய மக்கள், காவல்துறையால் தாமிரபரணி ஆற்றுப் பக்கமாக குறி வைத்து தள்ளப்பட்டனர். தாமிரபரணி நதிக்குள் குதித்தவர்களையும் விரட்டி விரட்டி அடித்தது காவல்துறை. இக்கொடுமைகளைப் படம் பிடித்த பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர்.
 
ஒன்றரை வயது பாலகன் விக்னேஷ் உள்ளிட்ட 17 பேர் அநியாயமாக அடித்தே கொலை செய்யப்பட்டனர். நீதி கேட்டுப் போராடியவர்கள் படுகொலை செய்யப்பட்ட அரச பயங்கரவாதம் அரங்கேறியது. இப்படுகொலை நடந்த சில நாட்களில் தினக்கூலி 150 ரூபாயாக உயர்த்தப்பட்டது. சிறைக்கு சென்ற அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, சட்டத்துறை அமைச்சராக இருந்த ஆலடி அருணா, அப்போதைய டி.ஜி.பி.குமாரசாமி, ஐ.ஜி. விபாகர் ஷர்மா ஆகியோர் இந்தப் படுகொலையை மூடி மறைக்கத் துணை போனார்கள். அரச பயங்கரவாதத்தை, படுகொலையை கட்டவிழ்த்து விட்ட கலெக்டர் தனவேல், கமிஷனர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் காப்பாற்றப்பட்டனர்.
 
webdunia
ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் என்ற ஒன்றை ஒப்புக்கு அமைத்தது திமுக அரசு. பதினோரு மாத விசாரணைக்குப் பின்பு 27.06.2000 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் நீதிபதி மோகன், ”பேரணிக்கு வந்திருந்தவர்கள் தங்களுக்குள் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு ஆற்றில் விழுந்து விட்டனர். நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட இறப்புகள் சந்தேகத்திற்க்கு இடமின்றி விபத்து தான்” என்று மனசாட்சியின்றி, மனிதாபிமானமின்றி அறிவித்தார். அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி மோகன் கமிசன் அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்த போது அந்த அறிக்கையை சட்டசபையிலேயே கிழித்தெறிந்து போர்குரல் எழுப்பினார் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். க.கிருஷ்ணசாமி.
 
தனது கணவர் மாரியப்பன் உள்ளிட்டோரின் விடுதலைக்காக கைக்குழந்தையுடன் போராடிய ரத்தினமேரி அவரது பச்சிளம் குழந்தை விக்னேஷ் உடன் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டது இன்னமும் நம் கண்களில் நிழலாடுகின்றது.
 
கட்டுரை உதவி:- கப்பிகுளம் ஜெ.பிரபாகர்

Share this Story:

Follow Webdunia tamil