2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பையில் பங்கேற்க வேண்டும் என்பதே எனது இலக்கு என்று கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
2011 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் தனது அதிரடி ஆட்டம் மூலம் பல வெற்றிகளை இந்திய அணிக்கு பெற்று தந்தவர் யுவராஜ் சிங். மேலும் அத்தொடரின் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றவர் ஆவார்.
இப்படி அதிரடி ஆட்டத்தின் மன்னனாய் விளங்கிய யுவராஜ் சிங்கிற்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் தகுந்த சிகிச்சை பின் தற்போது புற்றுநோய் பாதிப்பிலிருந்து முழுவதுமாக மீண்டு வந்தார் யுவராஜ் சிங்.
பின்னர், பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பிடித்தார். ஆனால், தொடரின் போது ஏற்பட்ட கணுக்கால் காயத்தால் அரையிறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் உடனடியாக விலகினார். இது அரையிறுதியில் இந்தியாவுக்கு பின்னடைவாகவே இருந்தது. அந்த போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், செய்தியாளர்களிடத்தில் பேசிய யுவராஜ் சிங், “நான், வாய்ப்பு கிடைக்கும் போது சிறப்பாக விளையாடுவதற்காக ஓய்வில் இருக்கும்போது கூட கடினமாக பயிற்சி செய்து வருகிறேன். நான் ஏன் இன்னும் சர்வதேச கிரிக்கெட் விளையாடக்கூடாது.
நான் என்னுடைய தேசத்திற்காக அணிக்குத் திரும்பி எனது பங்களிப்பை செலுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். மீண்டும் அணிக்கு திரும்பினால், சிறப்பாக விளையாடி அணியில் இரண்டு மூன்று வருடங்கள் எனது திறமையை வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பையில் பங்கேற்க வேண்டும் என்பதே எனது இலக்கு” என்றார்.