Publish Date: Fri, 17 Jan 2025 (08:20 IST)
Updated Date: Fri, 17 Jan 2025 (08:43 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இழந்துள்ளது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் சரியாக விளையாடாததே தோல்விக்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.
ரோஹித் ஷர்மா ஒரு இன்னிங்ஸில் கூட 50 பந்துகளை எதிர்கொள்ளவில்லை. இந்த சீரிஸ் முழுக்க அவர் சேர்த்ததே 100 ரன்களுக்குள்தான். இதன் காரணமாக அவர் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். அதனால் ரோஹித் ஷர்மாவிடம் இருந்து ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன்சியும் பறிக்கப்படலாம் என சொல்லப்பட்டது. ஆனால் சாம்பியன்ஸ் கோப்பை வரை அவரே கேப்டனாக இருப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவாக முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் பேசியுள்ளார். அதில் “அவர் டி 20 உலகக் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி வரை சென்றுள்ளோம். அவர் கேப்டன்சியில் மும்பை அணி 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். ஒரு முக்கியமானத் தொடருக்கு முந்தைய இறுதிப் போட்டியில் அவர் விலகிக்கொண்டார். இதையெல்லாம் இதற்கு முன்னர் எந்த கேப்டன் செய்துள்ளார். ஒரு தொடர், அவர் யார் என்பதை முடிவு செய்து விடாது” எனக் கூறியுள்ளார்.