Publish Date: Tue, 10 Sep 2024 (07:24 IST)
Updated Date: Tue, 10 Sep 2024 (07:27 IST)
இந்திய அணியில் கபில்தேவுக்கு பின்னர் நடுவரிசை ஆட்டத்தில் கோலோச்சியவர் யுவ்ராஜ் சிங் மட்டுமே. இந்திய அணி வென்ற இரு உலகக்கோப்பைகளின் போதும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதன் பின் ஆறு ஆண்டுகளாக அணியில் அவருக்கான இடம் தற்காலிகமானதாகவே இருந்தது. அதனால் அவர் ஓய்வை அறிவித்தார். யுவ்ராஜ் சிங்கை ஒரு கிரிக்கெட்டராக உருவாக்கியதில் அவரின் தந்தையான யோக்ராஜ் சிங்குக்கு முக்கியப் பங்குண்டு.
தொழில்முறை கிரிக்கெட்டரான அவர், தன் மகனுக்கு தானே பயிற்சியளித்தார். ஆனால் அவரின் பயிற்சிகள் மிகவும் கடுமையாக இருக்கும் என்றும் விமர்சனங்கள் யுவ்ராஜ் உள்ளிட்ட பலரால் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் யோக்ராஜ் சிங் தற்போது சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் பற்றி பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அர்ஜுன் பற்றிய அவரது பேச்சில் “நிலக்கரி சுரங்கத்துக்குள் வைரமாக் கிடைக்கும். அர்ஜுன் ஒரு நிலக்கரி” என்று பேசியுள்ளார். மேலும் “ஆனால் நிலக்கரியைக் கூட வித்தைத் தெரிந்தவரிடம் கொடுத்தால் அதை கோஹினூர் வைரமாக மாற்ற முடியும். ஆனால் அதன் மதிப்பு தெரியாதவரிடம் கொடுத்தால் அது வீண்தான். நான் என்னை பெரிய பயிற்சியாளர் என்று சொல்லவில்லை. ஆனால் யுவ்ராஜ் சிங்கே சொல்லியிருக்கிறார். எனது தந்தையின் கையில் மாயாஜாலம் இருக்கிறது என்று” எனக் கூறியுள்ளார்.