நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அந்த அணி நியுசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றதாலும், நேற்று நடந்த நியுசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியுசிலாந்து வெற்றி பெற்றதாலும் அந்த அணியின் அடுத்த சுற்றுக் கனவு சுக்கு நூறானது.
இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடவில்லை என்பதே உண்மை. பாகிஸ்தான் அணியின் உப்பு சப்பில்லாத ஆட்டம் இந்திய முன்னாள் வீரர்களையே அதிருப்தியடைய வைத்துள்ளது. அஜய் ஜடேஜா மற்றும் கவாஸ்கர் உள்ளிட்டவர்கள் பாகிஸ்தான் அணியைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணி குறித்து பேசியுள்ள யுவ்ராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் “வாசிம் அக்ரம் போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? தொலைக்காட்சிகளில் உட்கார்ந்து பேசி காசு சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எல்லாம் பாகிஸ்தான் அணிக்கு சென்று பயிற்சி முகாம்களை நடத்த வேண்டும். பாகிஸ்தான் அணியை வலுவாக்க உங்களில் யார் செல்லப் போகிறார்கள்? உங்களால் முடியாது என்றால் என்னிடம் அணியை ஒப்படையுங்கள். ஒரே ஆண்டில் அணியை புதிதாகக் கட்டமைத்து வெற்றிப் பாதையில் செல்ல வைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.