Publish Date: Mon, 13 May 2024 (07:18 IST)
Updated Date: Mon, 13 May 2024 (07:19 IST)
தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் விராட் கோலி. அவர் 13 இன்னிங்ஸ்களில் 660 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார். இந்த ஐபிஎல் தொடர் மட்டுமில்லாமல் கடந்த 17 ஆண்டுகளாக அவர் சீராக அனைத்து சீசன்களிலும் ரன்களைக் குவித்து வருகிறார்.
இதனால் அவர் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரராக உள்ளார். இவர் 2008 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை ஆர் சி பி அணிக்காக மட்டுமே ஆடி வருகிறார். இது ஐபிஎல் தொடரில் வேறு எந்த வீரருக்கும் நடந்ததில்லை. வெளிநாட்டு வீரரான கைரன் பொல்லார்ட் இது போல மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடியுள்ளார்.
இந்நிலையில் நேற்று நடந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் கோலி ஒரு முக்கியமான மைல்கல் சாதனையை படைத்தார். அவர் ஐபிஎல் தொடரில் தனது 250 ஆவது போட்டியை நேற்று விளையாடினார். ஒரே அணிக்காக இத்தனை போட்டிகள் விளையாடிய ஒரே வீரர் என்ற சாதனையை இதன் மூலம் நிகழ்த்தியுள்ளார்.