இந்திய அணி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான அணியில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இருந்த பெரும்பாலான வீரர்கள் மீண்டும் இடம் பிடித்துள்ளனர். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றதால், இளம் வீரர்கள் சிலருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.
இளம் இந்திய அணிக்குக் கேப்டனாக ஷுப்மன் கில்லும், துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 25 வயதாகும் ஷுப்மன் கில் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா போன்ற அனுபவம் மிக்க வீரர்களுக்குப் பிறகு இந்திய அணியை வழிநடத்த உள்ளார்.
இந்நிலையில் அனுபவம் மிக்க வீரர்கள் இல்லாமல் இங்கிலாந்து தொடருக்கு செல்வதைப் பற்றி பேசியுள்ள ஷுப்மன் கில் “இங்கிலாந்து தொடரில் நான் கோலியை மிகவும் மிஸ் செய்வேன். அவரோடு இணைந்து பேட் செய்த இன்னிங்ஸ்கள் நல்ல நினைவுகள். நான் அவரது ஆட்டத்தை தொலைக்காட்சியில் பார்த்து வளர்ந்தவன். அவருடன் இணைந்து களத்தில் விளையாடிய தருணங்கள் என் வாழ்வில் மறக்க முடியாதவை” எனக் கூறியுள்ளார்.