Publish Date: Mon, 01 Jan 2024 (07:45 IST)
Updated Date: Mon, 01 Jan 2024 (08:00 IST)
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ச்சியாக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் ஷுப்மன் கில். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக கடந்த வருடத்தின் பெரும்பாலான நாட்கள் இடம்பிடித்திருந்தார்.
இந்திய அணி சார்பில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் சில வீரர்களில் ஷுப்மன் கில்லும் ஒருவர். ஆனால் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகள் அளவுக்கு இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இன்னும் தன்னுடைய ஃபார்மை கண்டுபிடிக்கவில்லை. இதன் காரணமாக அவரின் பேட்டிங் ஆர்டரை மாற்ற இந்திய அணியில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் அவரை ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் விளையாட வைக்க இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் தொடக்க ஆட்டக்காரராக ஆடிய கில் பின்னர் மூன்றாம் இடத்தில் விளையாடவைக்கப்பட்டார். ஆனால் அவரால் மூன்றாம் இடத்தில் பெரியளவில் ரன்களைக் குவிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.