Publish Date: Mon, 27 May 2024 (08:06 IST)
Updated Date: Mon, 27 May 2024 (08:07 IST)
கடந்த இரண்டு மாதங்களாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்திழுத்த ஐபிஎல் 17 ஆவது சீசன் நேற்றோடு முடிவடைந்தது. இறுதிப் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதிய நிலையில் கொல்கத்தா அணி மிக எளிதாக வெற்றியைப் பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் 113 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தது. அந்த இலக்கை 2 விக்கெட்கள் மட்டும் இழந்து 11 ஆவது ஓவரிலேயே எட்டி, மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையைப் பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். கடந்த மூன்று சீசன்களாக கொல்கத்தா அணிக்குக் கேப்டனாக செயல்பட்டு வரும் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த முறைக் கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் டெல்லி அணிக்குக் கேப்டனாக இருந்த போது அந்த அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் இரு வேறு அணிகளுக்குக் கேப்டனாக இருந்து இரு அணிகளையும் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற கேப்டன் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார். இந்த பெருமை ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன்களில் ஒருவரான தோனிக்குக் கூட கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.