Publish Date: Mon, 15 Jun 2020 (08:48 IST)
Updated Date: Mon, 15 Jun 2020 (08:50 IST)
ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் உலக டி20 போட்டிகளாவது நடைபெறுமா என்ற கேள்விக்கு சச்சின் டெண்டுல்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. அவை மீண்டும் நடக்குமா என்பதே சந்தேகத்திற்குரியதாக உள்ள நிலையில் பல கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு கருத்தை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் உலக கோப்பை டி20 போட்டிகளை அக்டோபர் முதல் டிசம்பர் வரை நடத்த ஐசிசி முடிவு செய்துள்ளது. ஆனால் அங்கும் கொரோனா பாதிப்பால் சர்வதேச கட்டுப்பாடுகள் இருப்பதால் உலக கோப்பை நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு தனது கருத்தை தெரிவித்துள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ”உலக கோப்பை டி20 போட்டிகள் நடக்குமா என்பது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் முடிவை பொறுத்தது. போட்டியை வெற்றிகரமாக அவர்கள் நடத்த முடியுமா என்பதுபற்றி யோசிக்கையில் நிதி நிலைமை குறித்தும் யோசிக்க வேண்டியுள்ளது. எது எப்படியிருந்தாலும் கிரிக்கெட் நடந்தாக வேண்டிய அவசியம் உள்ளது” என்று கூறியுள்ளார்
மேலும் “ரசிகர்கள் இன்றி போட்டியை நடத்துவது நன்றாக இருக்காது. அரங்கினுள் ரசிகர்களின் கோஷமே பல வீரர்களுக்கு உற்சாகத்தை தரும். எனவே 25 சதவீத பார்வையாளர்களை மட்டும் அனுமதிப்பதாக எடுக்கப்பட்டுள்ள முடிவு வரவேற்கத்தக்கது” என்று கூறியுள்ளார்.