Publish Date: Mon, 15 Aug 2022 (09:01 IST)
Updated Date: Mon, 15 Aug 2022 (09:04 IST)
நியுசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் ஐபிஎல் அணியின் உரிமையாளர் தன்னை அறைந்ததாக கூறியுள்ளார்.
நியுசிலாந்து அணியின் மூத்த வீரரான ராஸ் டெய்லர் சமீபத்தில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். 37 வயதாகும் டெய்லர் நியுசிலாந்து அணிக்காக 110 டெஸ்ட் போட்டிகள், 233 ஒருநாள் போட்டிகள் மற்றும் 102 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். நியுசிலாந்து அணிக்காக அதிக சர்வதேச ரன்கள் அடித்த வீரராக ராஸ் டெய்லர் இருக்கிறார். ஓய்வுக்கு பிறகு அவர் இப்போது தன்னுடைய சுயசரிதைப் புத்தகத்தை எழுதியுள்ளார்.
அந்த புத்தகத்தில் ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடியபோது நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி எழுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதில் “நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போது ஒரு சீசனில் தொடர்ந்து சில முறை டக் அவுட் ஆனேன். அப்போது அணியின் ஓய்வறையில் உரிமையாளர் ஒருவர் டக் அவுட் ஆவதற்காக உங்களுக்கு மில்லியன் கணக்கில் பணம் கொடுக்கவில்லை என்று கூறி என்னை நான்கைந்து முறை கன்னத்தில் அறைந்தார். அப்போது அவர் சிரித்துக்கொண்டும் இருந்தார். அதனால் அவர் உண்மையாக அறைகிறாரா அல்லது விளையாட்டுக்கு செய்கிறாரா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் பல வீரர்கள் இருக்கும் ஒரு இடத்தில் அப்படி நடந்துகொள்வது முறையானது இல்லை என்றே நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.