Publish Date: Fri, 12 Jan 2024 (07:35 IST)
Updated Date: Fri, 12 Jan 2024 (07:41 IST)
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மொஹாலியில் நேற்று நடந்த முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பாக சிவம் துபே 60 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான அணி 20 ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது நபி 42 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 17.3 ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 159 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
போட்டி முடிந்த பின்னர் பேசிய ரோஹித் ஷர்மா “இங்கு கடுமையான குளிர் நிலவியது. நிற்கக் கூட முடியவில்லை. பந்தை தொட்டாலே கை வீங்குகிறது. இந்த வெற்றியின் மூலம் பல நல்ல விஷயங்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. போட்டியில் ரன் அவுட் என்பது ஒரு பகுதிதான். அனைவருமே களத்தில் நின்று கடைசி வரை ரன்னடிக்க வேண்டும் எனதான் நினைப்பார்கள். நான் ஷுப்மன் கில் கடைசி வரை விளையாட வேண்டும் என ஆசைப்படுகிறேன். நாங்கள் பல விஷயங்களை முயற்சி செய்ய விரும்புகிறோம். அதன் ஒரு பகுதியாக இன்று 19 ஆவது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார்” என தெரிவித்துள்ளார்.