Publish Date: Sat, 13 May 2023 (08:09 IST)
Updated Date: Sat, 13 May 2023 (08:28 IST)
ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி சூர்யகுமாரின் அதிரடி ஆட்டத்தால் 218 ரன்களை சேர்த்தது. சூர்யகுமார் யாதவ் 48 பந்துகளில் அதிரடியாக விளையாடி 103 ரன்கள் சேர்த்தார். ஐபிஎல் போட்டிகளில் இது அவரின் முதல் சதமாகும்.
219 ரன்கள் என்ற கடினமான இலக்கோடு களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி தங்கள் பேட்ஸ்மேன்களை மிக விரைவாக அடுத்தடுத்து இழந்தது. இதனால் ஒரு கட்டத்தில் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறும் என்ற சூழல் நிலவியது.
ஆனால் 9 ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரஷீத் கான் மற்றும் அல்ஜாரி ஜோசப் இணை இலக்கை நெருங்க போராடியது. ரஷீத் கான் 32 பந்துகளில் 10 சிக்ஸர்கள் உட்பட 79 ரன்கள் விளாச 20 ஓவர்கள் முடிவில் 191 ரன்கள் என்ற நெருங்கிய ஸ்கோரை எட்ட உதவினார். ரஷீத் கனைன் இந்த இன்னிங்ஸ் போட்டியை கடைசி வரை விறுவிறுப்பாக வைத்திருந்தது.