Publish Date: Mon, 31 Aug 2020 (10:24 IST)
Updated Date: Mon, 31 Aug 2020 (10:41 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சி எஸ் கே அணியின் தற்போதைய கேப்டனுமான தோனியால் முன்புபோல ஆட்டத்தை பினிஷ செய்ய முடியவில்லை என ஆர்பி சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக தோனி என்ற பெயரை நீக்கிவிட்டு இந்தியாவில் கிரிக்கெட் பற்றி பேசமுடியவில்லை. உலகின் தலைசிறந்த பினிஷர் என்று கொண்டாடப்பட்ட அவர் சமீபத்தில் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து அவர் ஓராண்டுக்குப் பின் விளையாட இருக்கும் ஐபிஎல் தொடரைக் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் அவர் மீதான விமர்சனம் ஒன்றை வைத்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் ஆட்டக்காரர் ஆர் பி சிங்.
இதுகுறித்து அவர் ‘கடந்த ஒரு வருடமாகவே அவருக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. உலகக்கோப்பையிலும் அவரது ஆட்டம் கேள்விக்குள்ளானது. அதுமட்டுமில்லாமல் அவரால் முன்பு போல ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்க முடியவில்லை என்பதும் ஒரு காரணம்’ எனக் கூறியுள்ளார். உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் கடைசி வரை நிதானமாக விளையாடிய தோனி ரன் அவுட் ஆகி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.