Publish Date: Tue, 24 Oct 2023 (11:37 IST)
Updated Date: Tue, 24 Oct 2023 (11:38 IST)
1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் அணி நேற்று ஆப்கானிஸ்தான் அணியிடம் படுதோல்வி அடைந்துள்ளது கிரிக்கெட் உலகில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் பாகிஸ்தான் அணியை கடுமையாக சாடியுள்ளார்.
அதில் "இன்று சங்கடமாக இருந்தது. இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 280-ஐ எட்டுவது மிகவும் பெரிய விஷயம். ஈரமான பிட்ச் இல்லை. பாக் வீரர்களின் பீல்டிங், உடற்தகுதி நிலைகளைப் பாருங்கள். கடந்த இரண்டு வருடங்களில் ஒரு உடற்தகுதி சோதனை கூட இவர்களுக்கு செய்யப்படவில்லை என நாங்கள் அலறிக்கொண்டிருக்கிறோம். நான் தனிப்பட்ட பெயர்களை சொல்ல ஆரம்பித்தால், அவர்களின் முகம் வாடிவிடும். இவர்கள் தினமும் 8 கிலோ ஆட்டிறைச்சி சாப்பிடுவது போல் தெரிகிறது." என்று விரக்தியடைந்த அக்ரம் பாகிஸ்தான் அணி மீது கோபத்தை பொழிந்துள்ளார்.
மேலும் "தொழில் ரீதியாக நீங்கள் பணம் பெறுகிறீர்கள், உங்கள் நாட்டிற்காக விளையாடுகிறீர்கள். ஒரு குறிப்பிட்ட அளவுகோல் இருக்க வேண்டும். மிஸ்பா, பயிற்சியாளராக இருந்தபோது, அந்த அளவுகோல் இருந்தது. வீரர்கள் அவரை வெறுத்தார்கள், ஆனால் அது பலனளித்தது. பீல்டிங் என்பது உடற்தகுதியைப் பற்றியது, அங்குதான் பாகிஸ்தான் அணி பலவீனமாக உள்ளது.” எனக் கூறியுள்ளார்