Publish Date: Mon, 15 Apr 2024 (08:11 IST)
Updated Date: Mon, 15 Apr 2024 (08:13 IST)
நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் சி எஸ் கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் போட்டி நடைபெற்றது. இந்த சீசனின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றாக இது அமைந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த சி எஸ் கே அணி 206 ரன்கள் சேர்த்தது.
அந்த அணியின் ஷிவம் துபே(66), கேப்டன் ருத்துராஜ் (69) என அரைசதம் அடித்து கலக்க, கடைசி ஓவரில் களமிறங்கிய தோனி 4 பந்துகளில் 20 ரன்களை சேர்த்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் ஷர்மா கடைசி வரை நின்று சதமடித்த போதும் அந்த அணியால் 186 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.
இந்த போட்டியில் மும்பை பேட் செய்த 15 ஆவது ஓவர் முடிந்ததும் அந்த அணியின் பயிற்சியாளர்களான மார்க் பவுச்சர் மற்றும் கைரன் பொல்லார்ட் ஆகியோர் மைதானத்துக்குள் சென்று வீரர்களிடம் பேச முயன்றனர். அப்போது நடுவர் அவர்களை நிறுத்தி உள்ளே போகக் கூடாது எனக் கூறி தடுத்தார். அப்போது அவர்கள் நடுவர்களோடு வாக்குவாதம் செய்தனர். மேலும் களத்தில் இருந்த ரோஹித் ஷர்மாவை டைம் அவுட் எடுக்க சொல்லியும் கேட்டனர். ஆனால் அதற்கடுத்த ஓவரில்தான் டைம் அவுட் எடுக்கப்பட்டது.