Publish Date: Thu, 09 Apr 2015 (18:34 IST)
Updated Date: Thu, 09 Apr 2015 (18:56 IST)
இங்கிலாந்தின் விஸ்டன் இதழின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதினை இரண்டாவது முறையாக இலங்கை வீரர் குமார் சங்கக்கரா பெற்றார்.
கிரிக்கெட்டின் பைபிள் என்று பெருமைப்படுத்தப்படும் இங்கிலாந்தின் விஸ்டன் சஞ்சிகை ஒவ்வொரு வருடமும் வெளியிடும் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதினை வழங்கி வருகிறது. 1864ஆம் ஆண்டு முதல் இந்த விருதினை வழங்கி வருகிறது.
அது முதல் தற்போது வரை 151 முறை இவ்வாறு தேர்வு செய்து சிறப்பித்துள்ளது. தற்போது 152ஆவது முறையாக அறிவித்துள்ளது. இந்த முறை, இலங்கை அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரும், உலகக்கோப்பையுடன் ஓய்வு பெற்ற வீரருமான குமார் சங்கக்காரவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த உலகக்கோப்பை போட்டியில் தொடர்ச்சியாக அவர் அடித்த தொடர்ச்சியான 4 சதங்களுக்காக சங்கக்கராவுக்கு இந்த விருதை வழங்குவதன் மூலம், சரியான நபரை தேர்வு செய்துள்ளது என்று விஸ்டன் தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக 2011ஆம் ஆண்டும் சங்கக்கராவிற்கு சிறந்த கிரிக்கெட் வீரர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை இரண்டாவது முறையாக பெறும் இரண்டாவது வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் இந்தியாவின் வீரேந்திர ஷேவக் 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்படும் சிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்களின் பெயரும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை அணியின் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ், இங்கிலாந்தின் கேரி பேளன்ஸ், மொயீன் அலி, ஆடம் லித் மற்றும் நியூசிலாந்தின் சுழல்பந்து வீச்சாளர் ஜித்தான் பட்டேலுக்கும் வழங்கப்படவுள்ளது.