Publish Date: Wed, 03 Apr 2024 (21:39 IST)
Updated Date: Wed, 03 Apr 2024 (21:42 IST)
இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி ஐபிஎல்லில் அதிக ரன்களை குவித்த இரண்டாவது அணியாக சாதனை படைத்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையே நடந்து வரும் போட்டியில் கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களை குவித்துள்ளது.
அதிகபட்சமாக சுனில் நரேன் 39 பந்துகளில் 85 ரன்களை குவித்தார். கொல்கத்தா அணியின் சிக்ஸர் நாயகன் ஆண்ட்ரே ரஸல் 19 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். மற்றொரு அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங் எட்டே பந்துகளில் 26 ரன்களை குவித்தார்.
இவ்வாறாக மொத்தமாக 272 ரன்களை குவித்துள்ளது கொல்கத்தா அணி. முன்னதாக ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்கள் ஆர்சிபி அடித்த 263 ரன்கள் இருந்த நிலையில் சமீபத்தில்தான் சன்ரைசர்ஸ் 277 ரன்களை அடித்து அந்த சாதனையை முறியடித்தது. அதை தொடர்ந்து தற்போது இரண்டாவது அணியாக கொல்கத்தாவும் 272 ரன்கள் அடித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்து ஆர்சிபியை மூன்றாவது இடத்திற்கு தள்ளியுள்ளது.
இந்த ஸ்கோரை டெல்லி அணியால் சேஸ் செய்ய முடிந்தால் ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய ரன் சேஸிங்காக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.