Publish Date: Thu, 28 Dec 2023 (07:31 IST)
Updated Date: Thu, 28 Dec 2023 (07:50 IST)
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையே முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது சென்ச்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 245 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் பின்வரிசை பேட்ஸ்மேன் கே எல் ராகுல் அபார சதம் அடித்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்சை ஆடிவரும் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்களை இழந்து 256 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் டீன் எல்கர் சதமடித்து 140 ரன்களோடு ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இந்த போட்டியில் விக்கெட்களை கைப்பற்ற இந்திய பவுலர்கள் தடுமாறி வருகின்றனர்.
இந்த இன்னிங்ஸில் விக்கெட்டே விழாமல் இருந்த போது கோலி 29 ஆவது ஓவரில் ஸ்டம்ப் அருகே சென்று பைல்ஸ்களை மாற்றி பொருத்தினார். அவர் அப்படி செய்த அடுத்த இரண்டு பந்துகளில் தென்னாப்பிரிக்க வீரர் டோனி டி ஜோர்ஸி தனது விக்கெட்டை பும்ரா பந்தில் பறிகொடுத்து வெளியேறினார். இதே போல சில மாதங்களுக்கு முன்னர் ஸ்டுவர்ட் பிராட் பெயில்ஸை மாற்றி மேஜிக் விக்கெட்டை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.