Publish Date: Wed, 22 May 2024 (07:00 IST)
Updated Date: Tue, 21 May 2024 (23:55 IST)
கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேல் நடந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிந்து கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றன. இந்நிலையில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருந்த KKR மற்றும் SRH அணிகள் முதல் குவாலிஃபையர் போட்டியில் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி, தங்கள் அதிரடி ஆட்டத்தை ஆடமுடியாமல் தடுமாறியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் வந்த வீரர்களும் விக்கெட்களை இழக்க அந்த அணி தடுமாறியது. இதனால் 19.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இந்த இலக்கை துரத்தி ஆடிய கொல்கத்தா அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 14 ஆவது ஓவரிலேயே வெற்றியைப் பெற்று முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. அந்த அணியின் வெங்கடேஷ் ஐயர் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு கடைசியாக கொல்கத்தா அணி பைனலுக்கு சென்றது. அதன் பின்னர் பல சீசன்கள் சொதப்பி வந்த நிலையில் இந்த ஆண்டு கம்பீர் அந்த அணிக்கு ஆலோசகராக வந்த நிலையில் மீண்டும் இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. இதன் மூலம் மூன்றாவது முறையாக அந்த அணிக் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.