Publish Date: Wed, 16 Feb 2022 (15:37 IST)
Updated Date: Wed, 16 Feb 2022 (16:06 IST)
ஐபிஎல் ஏலத்தின் இரண்டாவது கலீல் அகமதுவை ஏலத்தில் எடுக்க டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் இரண்டு நாட்கள் பெங்களூருவில் நடந்து முடிந்தது. இந்த ஏலத்தில் கலந்துகொள்ள வந்த ஹூஜ் எட்மிடாடஸ் முதல் நாள் ஏலத்தின் போதே மயக்கமடைந்து விழுந்ததால் ஏலம் பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் சாரு ஷர்மா உடனடியாக அழைக்கப்பட்டு அவர் ஏலத்தைத் தொடர்ந்து நடத்தி முடிக்க உதவினார்.
ஆனால் இரண்டாவது நாளில் அவரால் ஒரு மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டு கலீல் அகமது தவறான விலைக்கு விற்கப்பட்டுள்ளார். கலீலை மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் ஏலத்தில் எடுக்க போட்டி போட்டனர். ஏலத்தொகை 5 கோடியைத் தாண்டியதும், மும்பை அணி 5.25 கோடிக்குக் கேட்டது. அதன் பின்னர் டெல்லி அணி பேட்டை உயர்த்தியதால் ஏலத்தொகை 5.5 கோடியாகி இருக்க வேண்டும். ஆனால் சாரு ஷர்மா மும்பை இந்தியன்ஸ் கேட்ட தொகையான 5.25 கோடி ரூபாய்க்கே கலீல் அகமது விற்கப்படுவதாக அறிவித்தார். இந்த உண்மை இப்போது தெரியவந்துள்ளது. இது சம்மந்தமான வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது.