Publish Date: Mon, 25 Nov 2024 (14:18 IST)
Updated Date: Mon, 25 Nov 2024 (14:37 IST)
பெர்த் நகரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த டெஸ்ட்டில் மிகச்சிறப்பாக விளையாடி இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்கள் சேர்த்து அசத்தினார் ஜெய்ஸ்வால். அவரின் இந்த இன்னிங்ஸ்தான் இந்திய அணிக்கு மிக முக்கியமானத் திருப்புமுனையாக அமைந்தது.
பேட்ஸ்மேன்களுக்கு பெர்த் ஆடுகளம் உகந்ததல்ல. இரு அணிகளுமே முதல் இன்னிங்ஸில் தடுமாறி நிலைகுலைந்ததை நாம் பார்த்தோம். ஆனாலும் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா சுதாரித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை வழிநடத்தி சென்றார் ஜெய்ஸ்வால் என்றே சொல்லலாம்.
இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் பேசிய ஜெய்ஸ்வால் “இந்த போட்டி முழுவதும் கே எல் ராகுல்தான் என்னை வழிநடத்தினார். அவருடைய அறிவுரைகள் எனக்கு மிகவும் உதவின” எனக் கூறியுள்ளார். இதுபற்றி பேசியுள்ள ராகுல் “நான் முதல் முதலாக ஆஸ்திரேலியாவுக்கு விளையாட வந்த போது முரளி விஜய் என்னை வழிநடத்தினார். அதைதான் நான் இப்போது ஜெய்ஸ்வாலுக்கு செய்தேன்” எனக் கூறியுள்ளார்.