Publish Date: Mon, 13 Jun 2022 (12:39 IST)
Updated Date: Mon, 13 Jun 2022 (12:42 IST)
அடுத்த ஆண்டு முதல் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான ஒளிபரப்பு ஏலம் தொடங்கி நடந்து வருகிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் டி20 சீசன் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. இந்த ஆண்டு முதல் இந்த போட்டிகளில் 10 அணிகள் போட்டியிட்டு விளையாடி வருகின்றன. இந்த போட்டிகளை ஒளிபரப்புவதற்கான தொலைகாட்சி உரிமம் மற்றும் ஓடிடி உரிமங்கள் பேக்கேஜாக ஏலத்தில் விடப்படுகின்றன.
2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியது முதலாக ஐபிஎல் போட்டிகளை 10 ஆண்டுகளுக்கு சோனி நிறுவனம் ஒளிபரப்பியது. அடுத்த 5 ஆண்டுகளாக தொலைகாட்சி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனமும் கைப்பற்றின.
இந்நிலையில் அடுத்த 2023 முதல் 2027ம் ஆண்டு வரையிலான ஒளிபரப்பு உரிமையை பிசிசிஐ 4 பிரிவுகளாக பிரித்து ஏலத்தை தொடங்கியுள்ளது. அதன்படி ஆசிய துணைகண்டத்தில் மட்டும் ஒளிபரப்புவதற்கான உரிமை, டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை, 18 போட்டிகளுக்கு டிஜிட்டல் அல்லாத ஒளிபரப்பு உரிமை மற்றும் உலக நாடுகளுக்கான ஒளிபரப்பு உரிமை என நான்கு பிரிவுகளில் நேற்று ஏலம் தொடங்கியுள்ளது.
இதில் பேக்கேஜ் 1 ரூ.23,370 கோடி ரூபாய்க்கும், பேக்கேஜ் 2 ரூ.19,680 கோடிக்கும் ஏலம் சென்றுள்ளது. இதனால் ஒவ்வொரு போட்டியின் மதிப்பும் தோராயமாக ரூ.105 கோடியை எட்டியுள்ளது. இதுவரை அதிக மதிப்புமிக்கதாக இருந்த அமெரிக்க நேசனல் புட்பால் லீக் போட்டிகளின் சாதனையை ஐபிஎல் போட்டிகள் மிஞ்சியுள்ளது.