இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி டிராவிலும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 246 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3ஆவது போட்டி மொஹாலியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 283 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகப்பட்சமாக பைர்ஸ்டோ 89 ரன்களும், ஜோஸ் பட்லர் 43 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 417 ரன்கள் குவித்தது. ரவீந்திர ஜடேஜா 90 ரன்களும், அஸ்வின் 72 ரன்களும் எடுத்தனர். விராட் கோலி 62 ரன்களும் எடுத்தனர். இதனால், இந்திய அணி 134 ரன்கள் முன்னிலை பெற்றது.
பின்னர், வலுவான டார்கெட்டை கொடுத்தால் மட்டுமே இந்திய அணியை வீழ்த்த முடியும் என்கிற நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 236 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் 8 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனால், இந்திய அணிக்கு 103 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. முரளி விஜய் டக் அவுட் ஆகி வெளியேறினார். பிறகு சத்தீஸ்வர் புஜாரா 25 ரன்களும் எடுத்து வெளியேறினார். பார்த்திவ் படேல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 67 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழி வகுத்தார்.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகன் விருது 4 விக்கெட்டுகள் மற்றும் 90 ரன்கள் குவித்த ரவீந்திர ஜடேஜாவிற்கு வழங்கப்பட்டது. 4ஆவது டெஸ்ட் போட்டி மும்பையில் வருகின்ற 8ஆம் தேதி தொடங்குகிறது.