Publish Date: Fri, 05 Oct 2018 (15:08 IST)
Updated Date: Fri, 05 Oct 2018 (15:11 IST)
மேற்கிந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்து கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ராஜ்கோட்டில் தொடங்கிய முதல் டெஸ்ட்டில் டாஸ் ஜெயித்த இந்தியா முதலில் பேட் செய்து அபாரமாக விளையாடி ரன் குவித்துள்ளது. இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுபடுத்த முடியாமல் மே.இ.தீ. அணி பௌலர்கள் தடுமாறினர்.
நேற்று அறிமுக வீரர் பிருத்விஷா சதமடித்து அசத்திய நிலையில் இன்று இந்திய அணியின் கேப்டன் வீராட் கோலியும் ஜடேஜாவும் சதமடித்துள்ளனர்.
நேற்றைய ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணி இன்று ஆரம்பம் முதலே ரன் குவிப்பில் ஈடுபட்டது. ரிஷப் பாண்ட் அதிரடியாக விளையாடி 92 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சதமடித்த கோலி 139 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து களமிரங்கிய ஜடேஜா பின்வரிசை வீரர்களோடு சேர்ந்து வேகமாக ரன்குவிக்க ஆரம்பித்தார். தொடர்ச்சியாக விக்கெட்கள் விழுந்தாலும் நிலைத்து நின்று ஆடிய ஜடேஜா தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார்.
இந்திய அணி 649 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய கேப்டன் கோலி டிக்ளேர் செய்தார். ஜடேஜா 100 ரன்களோடு அவுட்டாகமல் களத்தில் இருந்தார். மே.இ.தீ. அணியின் தேவேந்திர பிஷூ 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
தனது முதல் இன்னிங்ஸை ஆடிவரும் மேற்கிந்திய தீவுகள் 6 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 12 ரன்கள் சேர்த்துள்ளது.