Publish Date: Fri, 08 Mar 2024 (18:30 IST)
Updated Date: Fri, 08 Mar 2024 (18:36 IST)
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதை அடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்து விளையாடிய இந்திய அணி வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா, சுப்பன் கில் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி சதம் அடித்தனர்.
ரோகித் சர்மா 103 ரன்களில் அவுட் ஆனார். சுப்பன் கில் 110 ரன்களில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த வீரர்களும் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியை விட 255 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி உள்ளது.