Publish Date: Thu, 18 Apr 2024 (08:03 IST)
Updated Date: Thu, 18 Apr 2024 (08:05 IST)
ஐபிஎல் தொடரின் 32 ஆவது போட்டி நேற்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மிக எளிதாக வெற்றி பெற்றது.
இந்த டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அதன்படி குஜராத் பேட் செய்யவந்த போது ஆரம்பத்திலேயே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு வந்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து சென்ற வண்ணம் இருந்தனர். இதனால் அந்த அணி 18 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 89 ரன்கள் மட்டுமே சேர்த்தது. குஜராத் அணியில் ரஷீத் கான் அதிகபட்சமாக 24 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து பேட்டிங் இறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 9 ஓவர்களில் இலக்கை அதிரடியாக எட்டியது. இதன் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ரன்ரேட்டை ஏற்றிக்கொண்டுள்ளது. வெற்றிக்குப் பிறகு பேசிய ஆட்டநாயகனும் டெல்லி அணியின் கேப்டனுமான ரிஷப் பண்ட் “நாங்கள் ஒரு சாம்பியன் போல விளையாட வேண்டும் என பேசிக்கொண்டோம். இன்று எங்களுக்கு பல சாதகமான விஷயங்கள் நடந்தன. பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். நாங்கள் கடந்த சில போட்டிகளாக சரியாக விளையாடாததால் எங்கள் ரன்ரேட் மோசமாக இருந்தது. இந்த போட்டியில் அதை ஏற்றிக்கொள்ள வேண்டும் என்பதால் நாங்கள் அதிரடியாக இலக்கை துரத்தவேண்டும் என முடிவு செய்து விளையாடினோம்” எனக் கூறியுள்ளார்.