Publish Date: Thu, 17 Apr 2025 (07:02 IST)
Updated Date: Thu, 17 Apr 2025 (07:26 IST)
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 32 ஆவது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 188 ரன்கள் சேர்த்தது.
அதன் பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடுவதும், சீரான் இடைவெளியில் விக்கெட்களை இழப்பதுமாக இருந்ததால், போட்டி கடைசி வரை எந்த பக்கமும் சாயாமல் விறுவிறுப்பாக சென்றது. இப்படி சென்ற போட்டியில் கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணிக்கு 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட ஸ்டார்க் பந்துவீசி 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசிப் பந்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 2 ரன்கள் தேவைப்பட, ஒரு ரன் மட்டும் சேர்த்து இரண்டாவது ரன் எடுக்கும் போது ரன் அவுட் ஆனார் துருவ் ஜுரெல். இதனால் போட்டி சமனில் முடிய சூப்பர் ஓவர் விளையாடப்பட்டது.
சூப்பர் ஓவரிலும் ஸ்டார்க்கே டெல்லி அணிக்காக பந்துவீச அந்த ஓவரில் 11 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினார். இந்த இரண்டு சிறப்பான ஓவர்கள் மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஐந்தாவது வெற்றியை அவர் உறுதி செய்தார். ஆட்டநாயகன் விருது பெற்ற அவர் பற்றி பேசியுள்ள முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெய்ன் “இதற்காகதான் ஸ்டார்க்குக்கு பெரிய தொகை கொடுக்கப் படுகிறது” எனப் பாராட்டியுள்ளார்.