Publish Date: Thu, 02 May 2024 (08:23 IST)
Updated Date: Thu, 02 May 2024 (08:24 IST)
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சி எஸ் கே அணி 7 விக்கெட்களை இழந்து 162 ரன்கள் சேர்த்தது.
இதனை அடுத்து 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி 17.5 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்தது. இது சென்னை அணிக்கு ஐந்தாவது தோல்வியாகும் இதனால் சென்னை அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு சிக்கலாகி வருகிறது.
இந்த போட்டியில் சி எஸ் கே அணிக்கு ஆரம்பம் முதலே அனைத்துமே சொதப்பலாக நடந்தது. ருத்துராஜ் வழக்கம் போல டாஸ் தோற்றார். பேட்டிங்கில் வரிசையாக இறங்கும் ஆர்டரை மாற்றி ஷிவம் துபேவை மூன்றாவது பேட்ஸ்மேனாக இறக்கினார்கள். ஆனால் அவர் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனார். அதன் பின்னர் விளையாடிய பேட்ஸ்மேன்கள் தடவி தடவி ஆடியதால் 7 முதல் 15 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. அதன் பின்னர் அதிரடியாக ஆடிய போதும் 162 ரன்களுக்கு மேல் அடிக்கவில்லை. ஆனால் இந்த மைதானத்தில் நல்ல இலக்கு 200 ரன்களாக இருந்தது.
அதன் பின்னர் பவுலிங் சொதப்பல். ஏற்கனவே அணியில் பதிரனா மற்றும் தேஷ்பாண்டே ஆகியோர் இல்லை. இந்நிலையில் தீபக் சஹாரும் ஒரு ஓவர் கூட வீசாமல் காயம் காரணமாக வெளியேறினார். இப்படி எல்லா சொதப்பல்களும் சேர்ந்து போட்டியை பஞ்சாப் அணி எளிதாக வெற்றி பெற காரணமாக அமைந்தது.