Publish Date: Wed, 09 Apr 2025 (08:07 IST)
Updated Date: Wed, 09 Apr 2025 (08:42 IST)
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போராடித் தோல்வி அடைந்தது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடர்ச்சியாக நான்காவது தோல்வியாகும். முதல் போட்டியை வெற்றிகரமாக முடித்த சிஎஸ்கே அதன் பின்னர் நான்கு தோல்விகளை சந்தித்துள்ளது.
நேற்று நடைபெற்ற போட்டியில் அணியின் தோல்விக்கு முக்கியக் காரணம் பீல்டிங்கில் நடந்த சொதப்பல்கள்தான் என்று கேப்டன் ருத்துராஜேக் கூறியுள்ளார். இந்த போட்டியில் மட்டுமில்லாமல் இந்த சீசன் முழுக்கவே சி எஸ் கே வீரர்கள் கேட்ச்களைக் கோட்டை விட்டு வருகின்றனர். நேற்று சதமடித்த பிரியான்ஷ் ஆர்யாவின் இரண்டு கேட்ச்கள் விடப்பட்டது, ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது.
அதே போல தோனி சீக்கிரமே இறங்கி அதிரடியாக ஆடவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக நேற்றையப் போட்டியில் சீக்கிரமே இறங்கினார். அவர் 12 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்தாலும் அவரால் கடைசி வரை நின்று போட்டியை வெற்றிகரமாக முடித்து வைக்க முடியவில்லை. இதனால் சி எஸ் கே அணி புள்ளிப்பட்டியலில் 9 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.