Publish Date: Fri, 08 Mar 2024 (07:18 IST)
Updated Date: Fri, 08 Mar 2024 (07:31 IST)
சமீபத்தில் இந்திய அணியின் சுழல்பந்து ஜாம்பவான் அஸ்வின் தனது 500 ஆவது விக்கெட்டை வீழ்த்தினார். உலகளவில் இந்த மைல்கல்லை எட்டும் 8 ஆவது பவுலராகவும், இந்திய அளவில் இரண்டாவது பவுலராகவும் இந்த சாதனையைப் படைத்தார்.
இதையடுத்து நேற்று தரம்சாலாவில் நடந்த டெஸ்ட் போட்டி அவரின் 100 ஆவது டெஸ்ட் போட்டியாக அமைந்தது. இந்த போட்டியில் பந்துவீசிய அவர் 4 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார். 100 ஆவது போட்டியில் விளையாடிய அவர் களமிறங்கும் போது வீரர்கள் மரியாதை செலுத்தி அவரை வரவேற்றனர்.
இந்த மைல்கல்லை எட்டும் அஸ்வினுக்கு பல தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் லஷ்மன் சிவராமகிருஷணன் “நான் 100 ஆவது டெஸ்ட்டில் விளையாடும் அஸ்வினுக்கு வாழ்த்து சொல்ல போன் செய்தேன். ஆனால் அவர் கட் செய்துவிட்டர். வாட்ஸ் ஆப்பில் மெஸேஜ் செய்தேன். அதற்கும் பதில் இல்லை. இதுதான் சீனியர் வீரர்களுக்குக் கிடைக்கும் மரியாதை” எனக் கூறியுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் சிவராமகிருஷ்ணன் “அஸ்வின் ஒரு சுயநலமான பவுலர்” என சமூகவலைதளத்தில் பதிவிட்டு சர்ச்சைகளைக் கிளப்பினார். அதன் காரணமாக அவர் அழைப்பை அஸ்வின் புறக்கணித்திருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.