Publish Date: Thu, 19 Dec 2024 (09:26 IST)
Updated Date: Thu, 19 Dec 2024 (10:36 IST)
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியை இந்திய அணி போராடி சமன் செய்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் இருந்தபோது அதிர்ச்சி செய்தியாக அஸ்வின் தன்னுடைய ஓய்வு முடிவை நேற்று அறிவித்தார். தற்போது டெஸ்ட் விளையாடி வரும் பவுலர்களில் தனிச்சிறப்பு வாய்ந்தவர் அஸ்வின். 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 516 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.
இந்தியா சார்பாக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு இரண்டாவது இடத்தில் உள்ளார் அஸ்வின். இந்திய அணிக்காக அதிக தொடர் நாயகன் விருதை வென்றவர் என்ற பெருமைக்குரியவர் அஸ்வின். தோனி போலவே ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரின் பாதியிலேயே அஸ்வினும் ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அஸ்வின் திடீரென இப்படி ஓய்வை அறிவிக்கக் காரணம் நீண்ட நாட்களாக அணியில் நடந்து வரும் தொடர் அவமரியாதைதான் காரணம் என சொல்லப்படுகிறது. டெஸ்ட் தரவரிசையில் பவுலராகவும் ஆல்ரவுண்டராகவும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் அஸ்வினை வெளிநாட்டு தொடர்களின் போது அணி நிர்வாகம் ஒரு அறிமுக பவுலரைப் போல பென்ச்சில் உட்கார வைக்கின்றனர். அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு இருக்காது என அணி நிர்வாகம் தெரிவித்த பின்னர்தான் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.