Publish Date: Tue, 31 Jan 2017 (17:44 IST)
Updated Date: Tue, 31 Jan 2017 (19:33 IST)
ஒரு ஹோட்டல் ஊழியர் கூறிய அறிவுரையை ஏற்றுக்கொண்டதாக இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, மும்பையில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு சச்சின் பேசியதாவது:
யாரிடமிருந்தும் அறிவுரையை ஏற்கும் மனப்பக்குவம் இருந்தால், நாம் வாழ்கையில் மேம்பட முடியும். நான் சென்னையில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த போது, ஹோட்டல் வெய்ட்டர் என்னிடம் வந்து தயங்கிய படியே, நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்றால், உங்களிடம் ஒன்று கூற விரும்புகிறேன்” என்றார். நான் சொல்லுங்கள் என்றேன். உங்களுடைய பேட், ஸ்விங் செய்வதற்கு உங்களுடைய எல்போ கார்டு (Elbow guard) தடையாக இருக்கிறது என எனக்குப் படுகிறது” என்றார்.
அவர் கூறியது நூறு சதவீதம் உண்மைதான். எனக்கு ஏதோ ஒன்று அசௌகர்யமாக இருக்கிறது என நான் நினைப்பதுண்டு. அது எதுவென்று என்னால் உணர முடியவில்லை. ஆனால், எல்போ கார்டு உறுத்தலாக இருக்கிறது என எனக்கு தோன்றவே இல்லை. அவர் கூறிய பிறகுதான், தரமில்லாத எல்போ கார்டை நான் பயன்படுத்துவதை உணர்ந்து கொண்டேன். எனவே, அதை மாற்றி அமைத்தேன். அதன் பின் பேட் ஸ்விங் செய்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை.
எனவே யார் அறிவுரை கூறினாலும், அதை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்” என சச்சின் கூறினார்.